Sunday, March 14, 2010

SMS அணியைத் தோற்கடிப்போம்

அன்புள்ள தமிழ் வாசகப் பெருமக்களே!

இலங்கைத் தீவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் குறிக்கப்பட்டு வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மக்களின் வாக்குகளை வேட்டையாடுவதிலும் விலைக்கு வாங்குவதிலும் அரசியற் கட்சிகளும் தனிநபர்களும் மும்முரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழரின் பூர்வீகத் தாயகத்திலேயும் இத்தேர்தல் நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன.

இம்முறை தாயத்துத் தமிழர்களுக்கு மிகவும் குழப்பகரமான தேர்தலாக இது அமையப் போகிறது. இதுவரை, தட்டிக் கேட்கவென ஒரு கட்டமைப்பு இருந்தது. ஒருகட்டத்தில் வாக்கு அரசியலையும் அது தனது ஆளுமைக்குள் கொண்டுவந்து வழிகாட்டியது. அவர்கள் கைகாட்டிய திசையில் மக்களும் பயணித்தார்கள். இப்போது அந்தச் சக்தி அழிக்கப்பட்ட, அல்லது உடனடியாக மீண்டெழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் மீண்டும் தாயக அரசியல் என்பது பழைய நிலைமைக்குத் திரும்பியுள்ளது.

யார் சரியானவர்கள்? யாரை எமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்குச் சரியான விடை தற்போது தாயக மக்களின் மனங்களிலில்லை. இந்நிலையில் விடுதலைப் புலிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டு மக்களுக்குக் காண்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதிலிருந்து பிரிந்து சென்று தனியான ஓரணியை அமைத்துப் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் மக்களின் கவனத்துக்குரிய சக்திகளாகத் திகழ்கின்றன. புலிகளால் மக்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அந்தப் பரிந்துரையை முதன்மையாகக் கொண்டு வாக்குகளை அள்ளும் ஒரு நடவடிக்கையிலும் த.தே.கூ இறங்கியுள்ளது. அது தனக்கான வேட்பாளர்களைத் திரட்டியபோது யார்யாரிடம் எப்படியெப்படிக் கதைக்க வேண்டுமோ அப்படியப்படி கதைத்துக் கொண்டது. தீவிர தேசியவாதிகளிடமும் புலிகளின் ஆதரவாளர்களிடமும் கதைக்கும்போது தாம்தானே புலிகளால் வளர்க்கப்பட்ட சக்தி, எனவே எமக்குத்தானே உங்கள் ஆதரவு வரவேண்டும்? தொனியில் கதைப்பது தொடக்கம், புலத்திலே புலியைக் காட்டி தங்கள் ஆதரவு நிலையைத் தக்க வைப்பதும் இதற்கு உதாரணம்.

இதைவிட மக்கள் மனத்திலும் த.தே.கூ என்ற அந்த மாபெரும் சக்தி ஒரு மாயையாகப் பதிந்துள்ளது. ஏற்கனவே சில ஆண்டுகளாக அக்கூட்டமைப்புப் பற்றி ஏற்படுத்தப்பட்ட விம்பமும், பரப்புரையும் அவ்வளவு எளிதில் மக்களிடமிருந்து அகன்றுவிட முடியாது என்பது உண்மையும்கூட. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு த.தே.கூ இன் தலைமை தனது வெற்றியில் உறுதியாக இருப்பதுடன் தான்தோன்றித்தனமாக பல காரியங்களைச் செய்துகொண்டு வருகிறது. அதன் பின்னணியில் ஏராளமான விடயங்கள் நடந்து முடிந்துவிட்டன.

இன்றைய நிலையில் இந்த விம்பத்தை உடைத்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டிய தேவையுள்ளது. சம்பந்தர், மாவை, சுரேஸ் பிரேமச்சந்திரன் (SMS) ஆகியோரைக் கொண்ட அந்தக் கூட்டுத்தலைமை (இந்தக் கூட்டுத் தலைமையென்பது புலிகளாலோ மக்களாலோ ஏற்படுத்தப்பட்டதன்று; நாசகாரச் சக்திகள் தாமாகவே கைகோர்த்துக் கொண்டன.) எவ்வாறு தமிழரின் அரசியற் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முனைப்போடு செயற்படுகின்றது என்பதை வெளிக்கொணர வேண்டிய தேவை காலத்தின் கட்டாயமாகியுள்ளது. இதைப்பற்றி மிகச்சிலரே ஆக்கபூர்வமான கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். பலர், இந்தத் தலைமை பிழையானதெனத் தெரிந்தும், ‘வேறு வழியில்லை, இவர்களை வைத்துக்கொண்டு ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற நிலைப்பாட்டுடனோ, காலகாலமாக போதிக்கப்பட்டு வந்த ஒற்றுமைப் பூச்சாண்டிக் காரணங்காட்டியோ, முன்பே சொன்னதுபோல் இதுவரை போராட்டத்தைத் தலைமைதாங்கி வந்த சக்தியால் கைகாட்டப்பட்ட கட்டமைப்பு என்ற காரணத்தாலோ த.தே.கூட்டமைப்பை, அதன் தலைமையை விமர்சிக்கத் தயங்கிக் கொண்டுள்ளார்கள். இன்னும் சிலர் குருட்டுத்தனமான தனிப்பட்ட பக்தியால் SMS அணியினரின் பாதங்கழுவிக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த SMS அணியினரைத் தோற்கடிக்க வேண்டிய தேவைபற்றிய ஆழமான, தாக்கமான கட்டுரைகள் அதிகம் எழுதப்பட்டல் வேண்டும். ஒற்றுமை என்ற பூச்சாண்டியைக் காட்டிக்கொண்டு SMS அணியைத் தாங்கிப் பிடிப்பவர்கள் உண்மையை உணர்ந்து வெளிவர வேண்டும். குருட்டுத்தனமாக SMS அணிக்காகப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் செய்தித் தளங்கள் தமது நிலையை மாற்றி தமிழ்த் தேசியத்துக்கு உண்மையான பணியை ஆற்றவேண்டும். குறைந்தபட்சம் இந்த இணையத்தளங்கள் தமது தேசியப் பம்மாத்திலிருந்தாவது தம்மைக் கழற்றிக் கொண்டுவிட வேண்டும்.

SMS அணியைத் தோற்கடிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் இந்த வலைத்தளம், அந்நோக்கத்தை நிறைவேற்ற தன்னாலான சகல வழிகளிலும் முயற்சிக்கும். இந்த நோக்கில் தமது எண்ணங்களைப் பகிர நினைத்தும் களம் கிடைக்காமல் காத்திருக்கும் எழுத்தாளர்களுக்கு இது நிச்சயம் களம் அமைத்துக் கொண்டும்.

வாசகப் பெருமக்களின் ஆதரவோடு இந்தப் பரப்புரை முன்னெடுக்கப்படும். SMS அணியின் அராஜகங்கள், அவர்கள் ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கான வலுவான பரப்புரையை இத்தளம் முன்னெடுக்கும். தமிழர் தாயகத்தில் உண்மையான, நேர்மையான அரசியற் சக்தியை உருவாக்க உருவாக்க நினைக்கும் எவருமே எம்மோடு இணைந்து பயணிக்கலாம்.

தொடர்ந்தும் படைப்புக்களில் சந்திப்போம்.

நன்றி.

-நிர்வாகம்

No comments:

Post a Comment