தமிழர் தாயகத்தில் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலிலே திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் எல்லோரினதும் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி போட்டியிடும் இரு மாவட்டங்களில் திருகோணமலையும் ஒன்று.
இந்நிலையில் தமிழ்மக்களிடத்தில் – குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர், ஆய்வாளரிடத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது திருகோணமலை தேர்தல் மாவட்டம். காரணம், அங்கு தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமற் போகப்போகிறது என்ற ஒரு வாதம்.
கடந்தமுறை மூவாயிரத்துச் சொச்ச வாக்குகளால் ஓர் ஆசனத்தை அதிகமாகப் பெற்றுக்கொண்டது தமிழர் தரப்பு. இந்தமுறை என்னதான் ‘ஒற்றுமை’ப் பூச்சாண்டி காட்டிப் போட்டியிட்டாலும் ஓர் ஆசனம் மட்டுமே தமிழர் தரப்புக்குக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதிருந்த அதே வாக்காளர் தொகைதான் தமிழர்தரப்பில் இருப்பதும், ஏனைய சமூகங்களில் – குறிப்பாக முஸ்லீம் சமூகத்தின் வாக்காளர் எண்ணிக்கை கணிசமானளவில் உயர்ந்திருப்பதும் இதற்கு முதன்மைக் காரணங்கள். இரண்டாம் பட்சக் காரணங்களாக, பிள்ளையானாலும் ஏனைய சுயேட்சைக் குழுக்களாலும் பிரியப் போகும் தமிழ்வாக்குகள். எப்படித் தான் கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் சைக்கிள் சின்னக்காரர் போட்டியிலிருந்து விலகுவதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்கப்போவது அதிகபட்சம் ஓர் ஆசனம் மட்டுமே. அதற்குமேல் பெறவேண்டுமென்றால் மிகப்பெருந்தொகையில் கள்ளவாக்குப் போட்டால்தான் உண்டு.
ஆக, திருமலையில் தமிழர் தரப்புக்கு ஓர் ஆசனம் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது என்ற நிலையைக் கருத்திற்கொண்டு மேற்கொண்டு நகரலாம். இப்போது திருமலை தொடர்பாக எழுதும் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் சொல்லும் ஒரு விடயம், ‘அங்கு தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும்; எனவே கஜேந்திரகுமாரின் அணி தேர்தலிலிருந்து ஒதுங்க வேண்டும்’. திருமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டுமென்பது சரிதான். அதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. தமிழர் பால் அக்கறை கொண்ட யாருக்குத்தான் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்படுவது விருப்புக்குரிய காரியமாய் இருக்கக் கூடும்? இங்கே நாம் முரண்படும் விடயமென்னவென்றால், சம்பந்தர் ஐயா வெல்லவேண்டுமென்பதும் கஜேந்திரகுமார் அணி விலக வேண்டுமென்பதும் தான்.
திருமலையிலிருந்து நாடாளுமன்றம் போகும் தமிழன் கட்டாயம் சம்பந்தராகத்தான் இருக்கவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு இந்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள் முரண்டு பிடிப்பது ஏனென்றுதான் விளங்கவில்லை. இத்தனைக்கும் இவர்களில் பலர் சம்பந்தன் தவறான பாதையிற் செல்கிறார் என்ற விளக்கத்துடன்தான் இருக்கிறார்கள் என்பது ஒரு நகைமுரண். ஆனாலும் திருமலையில் வெல்லும் தமிழன் சம்பந்தராகத்தான் இருக்க வேண்டுமென்று மனப்பாடம் செய்துவைத்துக் கொண்டு செயலாற்றுகிறார்கள்.
சம்பந்தர் உட்பட்ட SMS அணி தவறான பாதையிற் செல்கிறது; உப்புச்சப்பற்ற ஒரு தீர்வுத்திட்டத்தை நோக்கி இவர்கள் நகர்த்தப்படுகிறார்கள்; தமிழ்மக்களின் போராட்டத்தின் நியாயத்தை, தியாகத்தை அர்த்தமற்றதாக்கும் சதிவலையில் தமிழினத்தைச் சிக்கவைக்கும் சதிகாரர்களின் கைப்பிள்ளையாக இவர்கள் நடந்துகொள்கிறார்கள் என்ற விமர்சனங்களை, குற்றச்சாட்டுக்களை இப்போது யாருக்கும் விளங்கப்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. இந்த அணியின் முகமூடியைக் கிழித்த அண்மைய நிகழ்வுதான் நிருபமா ராவுடனான இவர்களின் சந்திப்பு.
இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ அமைப்பும் செல்வம் அடைக்கலநாதனும் இருக்கும் நிலையில், நிருபமாவுடனான சந்திப்புக்கு அவரைக் கடாத்திவிட்டு SMS அணிமட்டும் சென்று குசுகுசுத்துவிட்டு வந்துள்ளது. ஏன் செல்வம் அடைக்கலநாதன் அழைத்துச் செல்லப்படவில்லை என்ற கேள்விக்கான விடை மிகத் தெளிவானது. இந்த மூவரைக் கொண்ட அணி மிகப்பெரும் சதிநாடகத்தில் ஓரங்கமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் நம்புவது தவறன்று என்பதை அவர்களே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று யாழ் மாவட்டத்திலே SMS அணியிலுள்ள இருவராலும் வாரி இறைக்கப்படும் பணம் எப்படி வந்ததென்று நாம் யோசித்தால் நிறைய விடயங்கள் புலப்படும் (கனடாவின் தானைத்தலைவன் தங்கவேலான் திரட்டிக் கொடுத்த பணமன்று).
இந்த SMS அணியின் ஓரங்கம்தான் இந்த சம்பந்தன் ஐயா. இவரையும் தோற்கடிப்பதன் ஊடாகத்தான் தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்ட முன்னெடுப்புக்களைத் தொடர முடியும். எமது போராட்டத்தை ஒழிக்கவென இரண்டு கட்டமாகச் செயலாற்றிய இந்தியா முதற்கட்டத்தில் மே 19 உடன் வெற்றிபெற்றுவிட்டது. இப்போது இரண்டாம் கட்டம். இதிலும் இந்தியாவையும் எமக்கெதிரான சதிகாரக் கும்பலையும் வெல்லவிட்டோமானால் எமது கதி அதோகதிதான்.
இந்தச் சம்பந்தரைத்தான் திருகோணமலையில் வெல்லவைக்க எமது புலத்து ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆய்வாளர் எனப் பலர் முயன்றுகொண்டிருக்கின்றனர். இதற்கு அவர்கள் வைக்கும் ஒரே சாக்குப்போக்கு: திருமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும். தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டுமென்ற காரணத்தால் மிகப்பிழையான, மிகவும் ஆபத்தான ஒருவரை நாடாளுமன்றம் அனுப்ப முடியுமா என்ன? அவரைத் தோற்கடித்து வேறொருவரை நாடாளுமன்றம் அனுப்புவதைப் பற்றி ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்? எல்லோரும் திரண்டுநின்று காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் நிற்கும் அணியை ஆதரிப்பதன் மூலம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் காபாற்றியதாகிறது; அத்தோடு தவறான ஒருவரைத் தோற்கடித்ததும் ஆகிறது.
இதுவொன்றும் சாத்தியப்படாத விடயமன்று. ஏதோ சம்பந்தர் அசைக்க முடியாத சக்தியாகத் திருமலையில் திகழ்கிறார் என்று கருதிக்கொண்டு யாராவது பேசுவார்களாக இருந்தால் அவர்கள் அங்குள்ள நிலைமை தெரியாமல் கதைப்பவர்களாகவே இருப்பர். சம்பந்தருக்குப் பின்னால் இருக்கும் பலமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு மாயையும் வீட்டுச் சின்னமும் தான். இதைச் சரியான முறையில் எதிர்கொண்டு அந்த மாயையைத் தகர்க்க முடியும். திருகோணமலையின் நகர்ப்புறத்தைத் தாண்டிப்பார்த்தால் சம்பந்தனுக்கு மிகப்பெரும் எதிர்ப்பலையொன்று ஏற்கனவே இருக்கிறது. மேலும் கெளரிமுகுந்தன், கண்மணி அம்மா போன்றவர்களுக்கு இருக்கும் செல்வாக்கும், ஆதரவும் அதிகமேதான். நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த சம்பந்தனைவிடவும் மக்களோடு நேரிலே களத்திலே நின்று பணியாற்றிய கெளரிமுகுந்தன், கண்மணி அம்மா குழுவுக்கு கீழ்த்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிக ஆதரவு உள்ளதென்பதே கள யாதார்த்தம். மிகக் கடுமையான போட்டியை சம்பந்தன் அணிக்கு அங்கே சைக்கிள் சின்னக்காரர் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் தொடக்கத்திலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் கெளரிமுகுந்தன் பற்றிய அவதூறுப் பிரச்சாரத்தைத் தொடங்கியிருந்தார். ஊடக, பண பலமின்றி களத்திலிறங்கி வேலைசெய்யும் கஜேந்திரகுமார் அணியைப் பலப்படுத்தி சரியான ஒருவரை நாடாளுமன்றம் அனுப்புவதே நாம் செய்ய வேண்டிய பணி. அஃதன்றி, சம்பந்தர் புராணம் பாடிக்கொண்டிருப்பது தவறு; அதற்கு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும், பிரதேசவாதத்தையும் (கிழக்கான் தலைமை தாங்குவதை வடக்கான் விரும்பவில்லை என்பது) துணைக்கழைப்பது மகாதவறு.
எனவே திருமலையிலிருந்து நாடாளுமன்றம் செல்லப்போகும் அந்தத் தமிழ்மகனை/மகளை சரியான பக்கத்திலிருந்து தெரிவு செய்து அனுப்ப வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. அதையுணர்ந்து அனைவரும் ஒன்றாக அணிதிரள்வதே சிறப்பு.
No comments:
Post a Comment